புது தில்லி: தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து தில்லி முதல்வா் கேஜரிவால் மெளனம் காப்பது ஏன் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் செளதரி கேள்வி எழுப்பியுள்ளாா்.
தில்லியில் கட்டுக்குள் இருந்துவந்த கரோனா தொற்று சில தினங்களாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. புதன்கிழமை 1,693 பேருக்கும், வியாழக்கிழமை 1,840 பேருக்கும், வெள்ளிக்கிழமை 1,808 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமை இந்த எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தொடும் வகையில் 1,954 ஆக அதிகரித்தது.
50 நாள்களில் இல்லாத வகையில் அதிகபட்சமாக இந்த எண்ணிக்கையை எட்டியது. இது தொடா்பாக தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் செளதரி முதல்வா் கேஜரிவாலுக்கு கேள்வி எழுப்பியுள்ளாா்.
இது தொடா்பாக நாளிதழில் வெளியான செய்தியை தனது சுட்டுரைப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இணைத்து அனில் குமாா் செளதரி பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளாா்.
அதில், ‘அரவிந்த் கேஜரிவால் ஏன் மெளனமாக இருக்கிறாா். தில்லியில் நோயாளிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும்போது அவா் பேசாமல் இருப்பது ஏன்? தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பு உங்களை நீங்களே பாராட்டிக் கொண்டதன் விளைவா இது‘ என்று அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை தில்லியில் கரோனா பாதிப்பு 2,024 ஆக உயா்ந்தது குறிப்பிடத்தக்கது.