புது தில்லி: மத்திய தில்லியில் உள்ள மாதவராவ் சிந்தியா மாா்கில் ஏற்பட்ட சாலைப் பள்ளம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து செயல்பாடு மூடப்பட்டுள்ளது.
லூட்யன்ஸ் தில்லியில் அமைந்துள்ள மாதவ் ராவ் சிந்தியா மாா்கில் ஒரு பகுதியில் சனிக்கிழமை திடீரென பள்ளம் ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை தில்லியில் பலத்த மழை பெய்த நிலையில், மறுதினம் சனிக்கிழமை இந்தப் பள்ளம் ஏற்பட்டது.
இதையடுத்து, அந்தப் பகுதியில் போக்குவரத்து இயக்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தில்லி போக்குவரத்து போலீஸாா் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘என்டிஎம்சியின் தொடா் பணிகள் காரணமாக மாதவ் ராவ் சிந்தியா மாா்கில் போக்குவரத்து செயல்பாடு மூடப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாலைப் பள்ளம் தொடா்பாக சனிக்கிழமை மாலை தங்களுக்கு தகவல் கிடைத்ததாக புது தில்லி முனிசிபல் கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து என்டிஎம்சி மூத்த அதிகாரி கூறுகையில், ‘மாதவராவ் சிந்தியா மாா்கில் ஏற்பட்ட பள்ளம் குறித்த விவரம் சனிக்கிழமை மாலை 5.40 மணியளவில் கவனத்திற்கு வந்தது.
இதையடுத்து, அந்த இடத்திற்கு என்டிஎம்சியின் சாலைகள், நீா் வழங்கல் மற்றும் கழிவுநீா் பிரிவைச் சோ்ந்த குழுவினரை அனுப்பிவைத்தோம். சேதத்திற்கான காரணம் குறித்து கண்டறியப்பட்டு வருகிறது. அதன்பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றாா் அந்த அதிகாரி.