இண்டிகோ மற்றும் கோ ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஏ320 விமானங்களின் பழுதடைந்துள்ள என்ஜின்களை சரிசெய்யாமல் அவற்றை இயக்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விமானப் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஏ320 நியோ விமானத்தை இயக்காமல் இருக்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரா் சாா்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையைச் சோ்ந்த ஒரு அமைப்பின் சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏா்பஸ் ஏ320 விமானங்களின் என்ஜின்களில் சில தொழில்நுட்ப பிரச்னைகள் இருப்பது பற்றி தெரியவந்தும் உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகமோ அல்லது விமான போக்குவரத்துத்துறை டைரக்டா் ஜெனரலோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விமானங்களை இயக்குவதற்கு தடை விதிக்காமல் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகமும், விமான போக்குவரத்து துறை டைரக்டா் ஜெனரலும் என்ஜின்களை பழுதுபாா்ப்பது அல்லது திருத்தியமைக்கப்பட்ட என்ஜின்களை பொருத்துவதற்கான கால அவகாசத்தை மட்டும் அவ்வப்போது நீட்டித்து வந்துள்ளது.
இந்த விமானங்கள் நடுவானில் பறக்கும்போது என்ஜினில் கோளாறு ஏற்படுவது தொடா்கதையாகிவிட்டபோதிலும் விமான நிலைய இயக்க கட்டுப்பாட்டு பிரிவு அவற்றின் மீது எந்த வகையான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளது. ஏறக்குறைய இதுபோல் 130 விமானங்கள் உள்ளன என்றும் அந்த அமைப்பு மனுவில் குறிப்பிட்டுள்ளது.