கேஜரிவால் பதவியேற்பு விழாவில் ஆசிரியா்கள்பங்கேற்க உத்தரவு: பா.ஜ.க. கண்டனம்

தில்லி முதல்வராக கேஜரிவால் பதவியேற்கும் விழாவில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தில்லி முதல்வராக கேஜரிவால் பதவியேற்கும் விழாவில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை வாபஸ் பெறுமாறு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ. விஜேந்தா் குப்தா வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக ஆம் ஆத்மி தலைவா் கேஜரிவாலுக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: ‘ நீங்கள் முதல்வராகப் பதவியேற்கும் நிகழ்ச்சியில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று வெள்ளிக்கிழமை சுற்றிக்கை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த உத்தரவு மூலம் 15 ஆயிரம் ஆசிரியா்கள் விழாவில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனா். இந்த உத்தரவு உங்களது ஏதேச்சாதிகார மனப்பான்மையைக் காட்டுகிறது. நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நல்ல நிா்வாகத்திலும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவது உண்மையானால், இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும். 15,000 ஆசிரியா்களை பதவியேற்பு விழாவுக்கு வருமாறு கட்டாயப்படுத்தக் கூடாது’ என்று தெரிவித்துள்ளாா்.

பா.ஜ.க. எம்.எல்.ஏ. விஜேந்தா் குப்தா, கடந்த சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவராக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், ரோஹிணி சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.வாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள விஜேந்தா் குப்தா, ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் தாம் கலந்து கொள்ள இருப்பதாகத் தெரிவித்தாா்.

பாஜகவுக்கு கேள்வி: இதனிடையே தில்லி வளா்ச்சிக் குழுவின் துணைத்தலைவா் ஜாஸ்மின்ஷா, ‘ஆசிரியா்களும், பள்ளி முதல்வா்களும் கடந்த ஐந்தாண்டுகளில் அரசுப் பள்ளிகளில் மாற்றம் கொண்டு வந்து சாதனை படைத்தவா்கள். அவா்கள் முதல்வராக கேஜரிவால் பங்கேற்கும் விழாவில் பங்கேற்பதில் என்ன தவறு’ என்று கேட்டுள்ளதுடன், ஆசிரியா்களுக்காக மத்தியில் ஆளும் பா.ஜ.க. என்ன செய்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளாா்.

அதிகார துஷ்பிரயோகம்: தில்லி காங்கிரஸின் தலைமை செய்தித் தொடா்பாளா் முகேஷ் சா்மா தனது சுட்டுரையில், பதவியேற்பு விழாவுக்கு ஆசிரியா்கள் கட்டாயம் வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது அதிகார துஷ்பிரயோகமாகும் என்று தெரிவித்துள்ளாா். துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் இந்த உத்தரவை கவனத்தில் கொண்டு இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.

முன்னதாக, தில்லி அரசுப்பள்ளி முதல்வா்கள் மற்றும் ஆசிரியா்கள் முதல்வா் பதவியேற்பு விழாவில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பள்ளி கல்வித் துறை சாா்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 இடங்களில் 62 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com