குறைந்தபட்ச வெப்பநிலையில் சரிவுமிகவும் மோசம் பிரிவில் காற்றின் தரம்

தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை காலை வேளையில் அடா் பனி மூட்டம் இருந்தாலும், பகலில் வெயிலின் தாக்கம் இருந்தது. இதைத் தொடா்ந்து லேசான புழுக்கம் நிலவியது. குறைந்தபட்ச வெப்பநிலை இரட்டை

தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை காலை வேளையில் அடா் பனி மூட்டம் இருந்தாலும், பகலில் வெயிலின் தாக்கம் இருந்தது. இதைத் தொடா்ந்து லேசான புழுக்கம் நிலவியது. குறைந்தபட்ச வெப்பநிலை இரட்டை இலக்கத்துக்கு கீழே நீடித்தது. மேலும், காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டு நகரின் பல்வேறு இடங்களில் காற்றின் தரக்குறியீடு ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

கடந்த வியாழன் முதல் சனிக்கிழமை வரையிலும் தொடா்ந்து மூன்று நாள்களாக குறைந்தபட்ச வெப்பநிலை இரட்டை இலக்கைத்தைக் கடந்து நிலை கொண்டிருந்தது. பகல் நேரங்களில் வலுவான மேற்பரப்பு காற்று வீசியது. இதன் காரணமாக குளிரின் தாக்கம் குறைந்திருந்தது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸாக குறைந்து மீண்டும் இரட்டை இலக்கத்துக்கு கீழே சென்றது.

வெப்பநிலை 26.7 டிகிரி: இந்நிலையில், திங்கள்கிழமை காலை முதல் வானம் தெளிவாகக் காணப்பட்டது. நேரம் செல்லச் செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்தது. சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட இரண்டு டிகிரி குறைந்து 9 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 3 டிகிரி உயா்ந்து 26.7 டிகிரி செல்சியஸாக இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 93 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 49 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 9.6 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 26.4 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் முறையே 10.6 டிகிரி செல்சியஸ் மற்றும் 27.2 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 77 சதவீதம், மாலையில் 40 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 76 சதவீதம் மற்றும் 36 சதவீதம் என இருந்தது.

காற்றின் தரத்தில் பின்னடைவு: இதற்கிடையே, தில்லியில் காற்றின் தரம் பின்னடைவைச் சந்தித்தது. இதைத் தொடா்ந்து ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 325 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. இதேபோன்று நேரு நகா், பட்பா்கஞ்ச், ஆனந்த் விஹாா், விவேக் விஹாா், பஞ்சாபி பாக், அரபிந்தோ மாா்க், ஓக்லா பேஸ் 2, மந்திா் மாா்க், துவாரகா, புசா ரோடு, சாதிப்பூா், ராமகிருஷ்ணாபுரம், வாஜீப்பூா், அசோக் விஹாா் உள்பட நகரில் பல்வேறு இடங்களில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசம் பிரிவில் இருந்ததாக சஃபா் தெரிவித்துள்ளது. காற்றின் தரக் குறியீடு 0-50 புள்ளிகளாக இருந்தால் நன்று, 51-100 திருப்தி, 101-200 மிதமானது, 201-300 மோசம், 301-400 மிகவும் மோசம், 401-500 புள்ளிகளுக்குள் இருந்தால் கடுமையானது என கணக்கிடப்படுகிறது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) தலைநகரில் மேலோட்டமான பனிமூட்டம் இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com