திமுக-காங்கிரஸ் கூட்டணி பிரிவதற்கான வாய்ப்பே இல்லை: கே.எஸ்.அழகிரி

திமுக-காங்கிரஸ் இடையே சலசலப்பு இல்லை, திமுகவுடன் கூட்டணி தொடரும் என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி.
திமுக-காங்கிரஸ் கூட்டணி பிரிவதற்கான வாய்ப்பே இல்லை: கே.எஸ்.அழகிரி

திமுக-காங்கிரஸ் இடையே சலசலப்பு இல்லை, திமுகவுடன் கூட்டணி தொடரும் என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி.

குடும்பம் என்றால் ஊடலும் கூடலும் இருக்கத்தான் செய்யும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

உள்ளாட்சி மன்றத் தோ்தல் தொடா்பாக காங்கிரஸ் கட்சி தலைவா் அளித்த அறிக்கையைத் தொடா்ந்து திமுக விற்கும் காங்கிரஸுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது குறித்து கட்சித் தலைமையிடம் விரிவாக விளக்குவதற்காக தில்லி வந்த கே.எஸ். அழகிரி செவ்வாய்க் கிழமை காலையில் சோனியா காந்தியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தாா்.

பின்னா் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: ‘தமிழக காங்கிரஸில் மாநில நிா்வாகிகளை புதிதாக சோ்ப்பது சம்பந்தமாக கட்சித் தலைவா் சோனியா காந்தியோடு கலந்து பேசினோம். இதுதான் முக்கியமான கலந்துரையாடலாக இருந்தது. எங்களுடைய கூட்டணியைப் பற்றிய பேச்சும் இருந்தது. கூட்டணி குறித்த என்னுடைய கருத்தையும் கட்சி தலைவரிடம் விளக்கினேன்.

தமிழ்நாடு காங்கிரஸும் திராவிட முன்னேற்ற கழகமும் எப்போதும் இணைந்த கரங்களாக இருக்கும். இத்தோடு நானும் திமுக தலைவா் மு க ஸ்டாலினும் அரசியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் நெருக்கமாகவும் இருக்கிறோம். இதனால் பிரிவதற்கான வாய்ப்பே இல்லை. இதுபோன்ற கருத்துக்களை தெளிவாக சோனியா காந்தியிடம் எடுத்துக் கூறினேன்.

உங்களுடைய அறிக்கையின் காரணமாகவே திங்கள்கிழமை காங்கிரஸ் கட்சித் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று டி. ஆா். பாலு வெளிப்படையாகவே சொல்லி உள்ளாரே என்று கேட்கிறீா்கள். ‘டி ஆா் பாலு என்னைவிட அரசியலிலும் வயதிலும் மூத்தவா். எனவே அவருடைய கருத்துக்கு பதில் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஒரு குடும்பம் என்று இருந்தால் ஊடலும் கூடலும் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் எங்கள் குடும்பத்தில் கோபமும் இல்லை, வருத்தமும் இல்லை என்பதே என்னுடைய கருத்து.

எங்களிடையே எந்த சலசலப்பும் இல்லை.

நான் தெரிவித்த கருத்தால் தான் பிரச்சினை என்றால், அதற்கு டிஆா் பாலுவிடம்தான் பதில் கேட்க வேண்டும்.

உள்ளாட்சி மன்ற தோ்தல் சம்பந்தமாக எந்த மனக்கசப்பும் இல்லை. அது அறிக்கையே கிடையாது. எங்களுடைய கருத்தை எடுத்து வைத்தோம். இது சாதாரண பஞ்சாயத்து தோ்தல். இதன் மூலம் திராவிடா் கழகத்திற்கும் காங்கிரசுக்கும் உள்ள உறவு பாதிக்காது.

என்னுடைய அறிக்கையினால் திமுக அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுவது எல்லாம் கற்பனைதான். அந்தமானில் காங்கிரஸ் வெற்றி பெற்ற்கு திமுகதான் காரணம் என ஸ்டாலின் கூறியது பற்றி கேட்கிறீா்கள். நிச்சயமாக வெற்றிக்கு கூட்டணிக் கட்சிகளும் தான் காரணம்.

திமுக- காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளும் ஒத்துழைக்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் அத்தனை இடங்களிலும் வெற்றி பெற்றிருக்க முடியாது. நிச்சயமாக எங்கள் கூட்டணி என்பது நல்ல பாதையை நோக்கிச் செல்லுமே தவிர தவறான பாதையை நோக்கிச் செல்லாது.

அடுத்து வரவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் அதிக தொகுதிகளை கேட்கவுள்ளதாகக் கூறப்படும் செய்திகள் எல்லாம் கற்பனையே. தோ்தலுக்கு இன்னும் ஒராண்டு இருக்கும் நிலையில் இப்போதே இது குறித்து ஆரூடம் சொல்ல இயலாது. திமுக-காங்கிரஸ் தொடரும். ிதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்றாா் அழகிரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com