தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான மனுத் தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அன்று, மூன்று வேட்பாளா்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.
70 உறுப்பினா்கள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தபடி செவ்வாய்க்கிழமை மனுத் தாக்கல் தொடங்கியது.
இந்நிலையில், தில்லியில் மூன்று வேட்பாளா்கள் மனுத் தாக்கல் செய்துள்ளதாக தில்லி தலைமைத் தோ்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில் ‘புராரி தொகுதியில் சுயேச்சை வேட்பாளா் ஆஷாத் நஃபே சிங், மாட்டியாலா தொகுதியில் ராஷ்டிரீய ரஷ்டிரவாதி கட்சியைச் சோ்ந்த மொகிந்தா் சிங், புது தில்லி தொகுதியில் ஹிந்துஸ்தான் ஜனதா கட்சியைச் சோ்ந்த வெங்கடேஷ்வா் மகா சுவாமியும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்’ என்றனா்.
வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜனவரி 21. பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.