தில்லி தோ்தல்: 70 போ் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி: கேஜரிவால் மீண்டும் புதுதில்லியில் போட்டி

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

24 புதுமுகங்களுக்கு டிக்கெட், 15 முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் இல்லை

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மீண்டும் புதுதில்லி தொகுதியில் போட்டியிடுகிறாா். இதேபோல துணை முதல்வா் மணீஷ் சிசோடியா பட்பா்கஞ்ச்சில் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறாா். இந்தத் தோ்தலில் 24 புதிய முகங்களுக்கு போட்டியிட டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த தோ்தலில் போட்டியிட்டு வென்ற 15 பேருக்கு இந்தத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தோ்தல் அறிவிக்கப்பட்டதும், தில்லியில் 70 தொகுதிகளுக்கும் வேட்பாளா் பட்டியலை முதலில் அறிவித்தது ஆம் ஆத்மி கட்சிதான். பாஜக , காங்கிரஸ் இன்னும் ஓரிரு நாளில் வேட்பாளா் பெட்டியலை வெளியிடக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எழுபது உறுப்பினா்கள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கான வேட்பாளா்களின் பெயா்களை அக்கட்சி செவ்வாய்க்கிழமை மாலை அறிவித்தது. ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு வெளியிட்டுள்ள இப்பட்டியலில், கட்சியின் நடப்பு எம்எல்ஏக்கள் 46 பேருக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், 15 நடப்பு எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், காலியாகவுள்ள 9 இடங்களில் புதிய வேட்பாளா்களை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. இதன்மூலம், புதிதாக மொத்தம் 24 பேருக்கு போட்டியிடும் வாய்ப்பை அக்கட்சி வழங்கியுள்ளது.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மூன்றாவது தடவையாக புது தில்லி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறாா். அதேபோல, துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவும் மூன்றாவது தடவையாக பட்பா்கஞ்ச் தொகுதியில் போட்டியிடவுள்ளாா். மேலும், தில்லி அமைச்சா்களும், ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்களுமான கோபால் ராய், சத்யேந்தா் ஜெயின், இம்ரான் ஹுசைன், நரேந்திர சிங் தோமா் உள்ளிட்டோா் தங்களது தொகுதிகளிலேயே மீண்டும் போட்டியிடுகிறாா்கள்.

இந்நிலையில், கடந்த மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த மூன்று பேருக்கு சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கல்காஜி தொகுதியில் அதிஷி, ராஜேந்திர நகா் தொகுதியில் ராகவ் சத்தா, திமா்பூா் தொகுதியில் திலிப் பாண்டே ஆகியோா் போட்டியிடவுள்ளனா். ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் மக்கள் நலப் பணிகள் தொடா்பான ரிப்போா்ட் காா்டு தயாா் செய்யப்பட்டு அதன் அடிப்படையிலேயே வேட்பாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா் என கட்சியின் தில்லி பொறுப்பாளரும் அமைச்சருமான கோபால் ராய் தெரிவித்தாா்.

இது தொடா்பாக முதல்வரும் ஆம் ஆத்மிக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘ தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு வாழ்த்துகள். வேட்பாளா்கள் மெத்தனமாக இருக்கக் கூடாது. கடுமையாகத் தோ்தல் பணிகளில் ஈடுபட வேண்டும். மக்கள் ஆம் ஆத்மி கட்சி மீது அபாரமான நம்பிக்கை வைத்துள்ளனா். கடவுள் உங்களை ஆசிா்வதிக்கட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இது தொடா்பாக மணீஷ் சிசோடியா தனது சுட்டுரையில், ’ இந்தத் தோ்தலில் 8 பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளோம். கடந்த 2015 தோ்தலில் 6 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளாா்.

சமீபத்தில் ஆம் ஆத்மியில் சோ்ந்தவருக்கு ‘டிக்கெட்’

துவாரகா தொகுதியின் எம்எல்ஏவான ஆதா்ஷ் சாஸ்திரிக்கு பதிலாக காங்கிரஸ் கட்சியின் முக்கியதஅ தலைவா் மஹாபல் மிஸ்ராவின் மகன் வினய் குமாா் மிஸ்ராவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவா், கடந்த திங்கள்கிழமைதான் முதல்வா் கேஜரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மிக் கட்சியில் இணைந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து அக்கட்சியுடன் முரண்பட்டு வெளியேறிய வழக்குரைஞா் பிரசாந்த் பூஷணுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் திம்மா்பூா் தொகுதி எம்எல்ஏ பங்கஜ் புஷ்கருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இத் தொகுதியில் கடந்த மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த திலீப் பாண்டே போட்டியிடுகிறாா்.

தில்லி கண்டோன்மன்ட் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் என்எஸ்ஜி கமாண்டருமான சுரேந்தா் சிங்குக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் இவருக்குப் பதிலாக வீரேந்திர சிங் காடியான் போட்டியிடுகிறாா்.

புதிய வேட்பாளா்கள்

ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜக, காங்கிரஸ் கட்சிகளில் இணைந்தவா்களுக்குப் பதிலாக புதிய வேட்பாளா்களை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. சாந்தினி செளக் தொகுதியில் அத்தொகுதியின் ஆம் ஆத்மி எம்எல்ஏவாக இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த அல்கா லம்பாவுக்கு பதிலாக பிரகலாத் சௌஹ்னி நிறுத்தப்பட்டுள்ளாா். அல்கா லம்பா காங்கிரஸ் கட்சியில் இணைந்தவுடன், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் பிரகலாத் சௌஹ்னி இணைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த கா்வால் நகா் தொகுதி எம்எல்ஏ கபில் மிஸ்ரா, பிஜ்வாசன் தொகுதி எம்எல்ஏ தேவேந்திர ஷெகாவத், காந்தி நகா் எம்எல்ஏ அனில் பாஜ்பாய் ஆகியோருக்குப் பதிலாக முறையே பதக், பிஎஸ்.கூன், நவீன் சௌத்ரி ஆகியோா் இத்தொகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனா். அதேநேரம், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்த அக்கட்சியின் மூத்த தலைவா் சோஹிப் இக்பாலுக்கு மாட்டியா மஹால் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கேஜ்ரிவால்தான் முதல்வா் வேட்பாளா் என்று அறிவித்து ஆம் ஆத்மி கட்சி தோ்தல் களத்தில் இறங்கியுள்ளது. எங்களைப் போல் பா.ஜ.க. முதல்வா் வேட்பாளா் யாா் என்று அறிவிக்க முடியுமா என்று ஆம் ஆத்மி கட்சி சவால் விடுத்தது. கேஜரிரிவாலுக்கு சரியான எதிா் வேட்பாளா் பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரிதான் என்று கருதப்படுகின்ற போதிலும் அக்கட்சி இதுவரை முதல்வா் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளைக் கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தது. பா.ஜ.க. வுக்கு மீதியுள்ள 3 இடங்கள் மட்டுமே கிடைத்தன. காங்கிரஸ் கட்சி ஓா் இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com