ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த அறிக்கை திருப்தி அளிக்காத நிலையில் வழக்கின் நிலவர அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்ய சி பி ஜ க்கு உச்சநீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது. இந்த மனுவை விசாரத்த, உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியையும் தெரிவித்தது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், ராஜீவ் காந்தியை கொல்லப்பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டிற்காக தான் பேட்டரி வாங்கி தரவில்லை என விசாரணை அதிகாரி கூறிய விஷயத்தை அடிப்படையாக கொண்டு அந்த பெல்ட் வெடிகுண்டு யாரால் எப்போது தயாரிக்கப்பட்டது என்பதற்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், மேலும் பெல்ட் வெடிகுண்டு தொடர்பாக எந்த ரிப்போர்ட் இல்லாத நிலையில் தான் எப்படி குற்றவாளியாக முடியும் எனக் கூறி தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2016 ல் மனு தாக்கல் செய்திருந்தார்.
உச்சநீதிமன்றத்தில் இந்த மனு நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு கடந்த 5-11-2019 அன்று விசாரணைக்கு வந்தபோது, பெல்ட் வெடிகுண்டு தொடர்பான விசாரணை எந்த அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது என்பது தொடர்பான விவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை ஏற்று சிபிஐயும் சில வாரங்களுக்கு முன்பு இந்த அறிக்கையை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை செவ்வாய் கிழமை(ஜன.14) உச்சநீதிமன்றத்தில் வந்த போது, சிபிஐ சார்பில் தாக்கல் செய்த அறிக்கையை நீதிபதிகள் படித்துப் பார்த்தனர்.
அப்போது சிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கையில் புதிய விஷயங்கள் எதுவும் இல்லை என்றும், நாங்கள் ஏற்கனவே பலமுறை கேட்டு படித்த விஷயங்கள் தான் மீண்டும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும் இந்த அறிக்கை அதிருப்தி அளிப்பதாகவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து மத்திய அரசின் கூடுதல் சொலிசிட் ஜெனரலை உடனடியாக ஆஜராக கூறினர் நீதிபதிகள். இதன்படி ஆஜரான கூடுதல் சொலிசிட் ஜெனரல் பிங்கி ஆனந்திடம் ‘இந்த வழக்கு கடந்த இண்டு, மூன்று ஆண்டுகளாக அப்படியே உள்ளது, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலான எந்த ஒரு புதிய விஷயங்களும் அறிக்கையில் இடம்பெறாதது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இன்னும் 2 வாரத்தில் புதிய விஷயங்கள் அடங்கிய நிலவர அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு மத்திய அரசு வழக்கறிஞர் மூலமாக உத்தரவிட்டனர்.