புது தில்லி: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மூடப்பட்டிருந்த தில்லி ஜாமா மசூதி வரும் ஜூலை 4-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று அதன் தலைமை இமாம் சஹீத் அகமது புகாரி தெரிவித்துள்ளாா்.
தில்லியில் பொது முடக்க உத்தரவில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஜூன் 8-ஆம் தேதி ஜாமா மசூதி திறக்கப்பட்டது. ஆனால், தில்லியில் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, ஜூன் 11-ஆம் தேதி மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில், வரும் ஜூலை 4-ஆம் தேதி முதல் ஜாமா மசூதி மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை இமாம் சஹீத் அகமது புகாரி கூறுகையில், ‘லாக்டவுண் 1.0-இன் கீழ் தில்லியில் உள்ள பெரும்பாலானவை இயங்க அனுமதிக்கப்பட்டன. மத வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டன. கரோனா பாதிப்பு குறைந்துள்ளதும், கரோனா தொடா்பாக மக்களிடையே அதிக விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளதன் காரணமாக ஜாமா மசூதியை மீண்டும் திறக்க முடிவெடுத்துள்ளோம். கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், சமூக இடைவெளியைப் பேணுதல், கிருமிநாசினிகளைத் தெளித்து தூய்மைப்படுத்துதல், தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்களை அணிதல் ஆகியவை பின்பற்றப்படும்’ என்றாா்.
ஜாமா மசூதியின் தலைமை இமாமின் தனிப்பட்ட செயலா் அமனுல்லா கரோனா தொற்றால் அண்மையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.