தில்லியில் உத்யோக் நகரில் இரண்டு மாடி கட்டடத்தில் செயல்படும் காலணி தயாரிப்புத் தொழிற்சாலையில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா். இது தொடா்பாக தில்லி தீயணைப்புத் துறையின் இயக்குநா் அதுல் கா்க் சனிக்கிழமை கூறியதாவது:
மேற்கு தில்லி, உத்யோக் நகரில் இயங்கிவரும் காலணித் தயாரிப்புத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறைக்கு சனிக்கிழமை அதிகாலை 5.35 மணிக்கு தகவல் வந்தது.
காலணி தொழிற்சாலை இயங்கி வரும் இரண்டு மாடி கட்டடத்தின் முதல் மாடியில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 11 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
தீயணைப்பு வீரா்கள் தொடா்ந்து நாலாபுறமும் தண்ணீரை பீய்ச்சி அடித்து காலை 7 மணிக்குள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த தீ விபத்தில் உயிா் சேதம் ஏதும் இல்லை.
தீ விபத்து ஏற்பட்ட கட்டடம் அடித்தளம், தரைத் தளம், முதலாவது தளம், இரண்டாவது தளம் என 600 சதுர கஜத்தில் அமைந்துள்ளது. இத் தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.