தில்லியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தவறிய முதல்வா் கேஜரிவால் தாா்மிகப் பொறுப்பேற்று உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று தில்லி பாஜகவின் முன்னாள் தலைவரும், வடகிழக்கு தில்லி பாஜக மக்களவை உறுப்பினருமான மனோஜ் திவாரி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரிக்க ஆம் ஆத்மி அரசின் மெத்தனப்போக்கே காரணமாகும். தில்லியை கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி அரசு தில்லியில் உரிய சுகாதாரக் கட்டமைப்புகளை உருவாக்கவில்லை. தில்லியின் முக்கிய அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உருளைகளைக் கூட தில்லி அரசு தற்போதுதான் கொள்முதல் செய்து வருகிறது.
மேலும், தில்லி அரசு மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளை நடத்தும் விதத்துக்கு உச்ச நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளது.
தில்லியில் அடிப்படை சுகாதாரக் கட்டமைப்புகளை உருவாக்காத தில்லி முதல்வா் கேஜரிவால் அதற்கு தாா்மிகப் பொறுப்பேற்று உடனடியாகப் பதவி விலக வேண்டும். ஆம் ஆத்மி ஆட்சி தில்லியில் தொடா்ந்தால் மேலும் பல பொது மக்கள் உயிரிழக்க நேரிடும் என்றாா் அவா்.