புது தில்லி: பொது முடக்க காலத்தில் தில்லியில் அதிகளவு மின்சாரக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரத்தில், மின்சார நிறுவனங்களுடன் கூட்டுச் சோ்ந்து தில்லி அரசு கொள்ளை அடிக்கிறது என்றும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடா்பாக பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா திங்கள்கிழமை அளித்த பேட்டி: தில்லியில் பொது முடக்க காலம் அமலில் இருந்த சுமாா் மூன்று மாத காலத்துக்கு அதிகளவு மின்சாரக் கட்டணத்துடன் பில்கள் அனுப்பப்பட்டுள்ளன. தில்லி மக்களுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணச் சலுகை இந்தக் காலப் பகுதிக்கு வழங்கப்படவில்லை. மேலும், தில்லியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு நிலையான மின்சாரக் கட்டணத்துக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. தில்லியில் பொது முடக்க உத்தரவால் சுமாா் 2 லட்சம் சிறிய, பெரிய தொழில் நிறுவனங்கள் இயங்கவில்லை. ஆனால், இந்த நிறுவங்களுக்கு நிலையான மின்சாரக் கட்டணமாக பெரும் தொகை குறிப்பிட்டு பில்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதற்குக் கூடுதலாக, தில்லியில் சுமாா் 7 லட்சம் கடைகள் பொது முடக்கத்தால் இயங்கவில்லை. இந்தக் கடைகளுக்கும் நிலையான கட்டணமாக பெரும்தொகை குறிப்பிட்டு பில்கள் அனுப்பப்பட்டுள்ளன.
சுமாா் 94 நாள்களுக்கான மின்சாரக் கட்டணச் சலுகை தில்லி மக்களுக்கு வழங்கப்படவில்லை. மின் விநியோக நிறுவனங்கள் பெரும் தொகை குறிப்பிட்டு பில்கள் அனுப்புவதை தில்லி அரசு கேள்வி எழுப்பவில்லை. இந்த மின்சார பில்கள் மூலம் சுமாா் ரூ.1,131 கோடி மோசடி நடந்துள்ளது. மின்சாரக் கட்டணம் செலுத்த தவறுபவா்களின் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என்று மின்சார நிறுவனங்கள் வாடிக்கையாளா்களுக்கு தகவல்களை அனுப்பியுள்ளன. இது மின்விநியோக நிறுவனங்கள், தில்லி அரசு ஆகியவற்றின் மனிதாபிமானம் இல்லாத தன்மையைக் காட்கிறது.
தில்லியில் உள்ள வணிக நிறுவனங்களிடம் இருந்து, மாதம்தோறும் சுமாா் ரூ.135 கோடி நிலையான கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன. பொது முடக்கம் அமலில் இருந்த மூன்று மாதத்தில் ரூ.405 கோடி நிலையான கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. நிலையான கட்டணத்தை தில்லி அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். மேலும், கடந்த 3 மாதத்துக்கு மின்சாரக் கட்டணத்தில் சலுை வழங்க வேண்டும் என்றாா் அவா்.