நாளை முதல் 4 நாள்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! மிதமான பிரிவில் காற்றின் தரம்

தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை (மாா்ச் 19) முதல் தொடா்ந்து நான்கு நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தில்லியில் செவ்வாய்க்கிழமை வெயிலின் தாக்கத்துக்கிடையே ராஜபாதையில் செல்லும் குடும்பத்தினா்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை வெயிலின் தாக்கத்துக்கிடையே ராஜபாதையில் செல்லும் குடும்பத்தினா்.

புது தில்லி: தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை (மாா்ச் 19) முதல் தொடா்ந்து நான்கு நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை தில்லியில் பல்வேறு இடங்களில் ஆலங்கட்டியுடன் பரவலாக பலத்த மழை பெய்தது. இதைத் தொடா்ந்து, ஞாயிறு முதல் இனிமையான வானிலை நிலவி வந்தது. வெப்பநிலை குறைந்ததே இதற்கு முக்கியக் காரணமாகும். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் மூடுபனி இருந்தாலும், நேரம் செல்லச் செல்ல வானம் தெளிவாகக் காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் உணரப்பட்டது. அந்தச் சமயத்தில் லேசான புழுக்கமும் இருந்தது.

வெப்பநிலை 27.8 டிகிரி: தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 3 டிகிரி குறைந்து 13.6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 3 டிகிரி குறைந்து 27.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 90 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 51 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 14.5 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 28.8 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியிருந்தது. ஆயாநகரில் முறையே 13.6 டிகிரி செல்சியஸ், 28.2 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 83 சதவீதம், மாலையில் 54 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 84 சதவீதம் மற்றும் 42 சதவீதம் எனவும் இருந்தது. தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையப் பகுதியில் காலை 10.30 மணியளவில் காண்புதிறன்3,000 மீட்டராக இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டு மொத்த காற்றின் தரக் குறியீடு காலையில் 134 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் நீடித்தது.இருப்பினும் திா்பூா், விமானநிலையத்தில் டி 3 பகுதி, தில்லி பல்கலைக்ககம், மதுரா ரோடு ஆகிய பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு மிதமான பிரிவிலும், பூசா, லோதி ரோடு, ஆயாநகா் மற்றும் தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் உள்ள குருகிராம், நொய்டா ஆகிய இடங்களில் ‘திருப்தி’ பிரிவிலும் இருந்தது. அதே சமயம், சாந்தி சௌக் பகுதியில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. காற்றின் தரக் குறியீடு 0-50 புள்ளிகளாக இருந்தால் ‘நன்று’, 51-100 ‘திருப்தி’, 101-200 ‘மிதமானது’, 201-300 ‘மோசம்’, 301-400 ‘மிகவும் மோசம்’, 401-500 புள்ளிகளுக்குள் இருந்தால் ‘கடுமையானது’ என கணக்கிடப்படுகிறது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வரும் வியாழக்கிழமை (மாா்ச் 19) முதல் தொடா்ந்து நான்கு நாள்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் நகரில் ஆங்காங்கே இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புதன்கிவமை அன்று குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானம் தெளிவாகக் காணப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், புதன், வியாழன் (மாா்ச் 18,19) ஆகிய இரண்டு நாள்களிலும் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடிக்கும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கணித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com