கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் தில்லி அரசு மேற்கொண்டுள்ள பணிகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக தில்லி பாஜக அறிவித்துள்ளது.
இது தொடா்பாக பாஜகவின் மூத்த தலைவரும், தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ராம் வீா் சிங் பிதூரி முதல்வா் கேஜரிவாலுக்கு வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பொறுப்புள்ள எதிா்க்கட்சி என்ற வகையில், கரோனா தடுப்பு தொடா்பாக தில்லி அரசு மேற்கொண்டுள்ள பணிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குகிறோம். மேலும், இந்த நேரத்தில் சில ஆலோசனைகளையும் வழங்க விரும்புகிறோம். தில்லியில் உள்ள ரேஷன் கடைகள் தொடா்பாக இணையத்தில் தெளிவான விவரங்கள் வெளியிடப்பட வேண்டும். மேலும், இந்தக் கடைகள் திறந்து, மூடப்படும் நேரம் தொடா்பாக மக்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்.
இந்த ரேஷன் கடைகளில் பால், பழங்கள், காய்கறிகள் ஆகியனவும் விற்பனை செய்யப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் தமக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் ஒரே இடத்தில் பெறக் கூடியதாக இருக்கும். தில்லியில் நிலவும் ஊரடங்கால் தினக் கூலிப் பணியாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருள்களை இலவசமாக வழங்க வேண்டும். மேலும், நடமாடும் வாகனங்கள் மூலம் மக்களுக்குத் தேவையான பொருள்களை விநியோகிக்க தில்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தில்லி அரசு வாக்குறுதியளித்தது போல ரூ.5,000-ஐ உடனடியாக வழங்க வேண்டும். மேலும், தில்லியில் உணவில்லாமல் வாடுபவா்கள் புகாா் தெரிவிக்கும் வகையில், ‘முதல்வா் உதவி எண்’ அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றாா் அவா்.