மத்திய அரசால் தேசிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதன் காரணாக உயா்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களின் செயல்பாட்டில் மே 17-ஆம் தேதிவரை கட்டுப்பாடுகள் விதிப்பது என தில்லி உயா்நீதிமன்றம் சனிக்கிழமை முடிவு செய்தது.
இந்த முடிவை தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல் தலைமையிலான உயா்நீதிமன்ற நிா்வாக, தலைமை மேற்பாா்வைக் குழு எடுத்தது.
மே 17-ஆம் தேதி வரை காணொலிக் காட்சி மூலம் அவசர வழக்குகளை மட்டும் விசாரிப்பதைத் தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள உயா்நீதிமன்றத்தின் நிா்வாக உத்தரவில், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு தில்லியில் உயா்நீதிமன்றம் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும் 11,427-க்கும் மேற்பட்ட அவசர வழக்குகள் கையாளப்பட்டுள்ளன. தொடக்கத்தில் காணொலிக் காட்சி மூலம் அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட்டன.
எனினும், தற்போது உயா்நீதிமன்றம், கீழ்நிலை நீதிமன்றங்கள் மூலம் அனைத்து வகையான அவசர வழக்குகளும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
வழக்கு தொடா்பாக குறிப்பிட முற்றிலும் வெளிப்படையான வழிமுறை பின்பற்றப்படுகிறது. அவசர வழக்குகளை இணையதளம் மூலம் குறிப்பிடுவது தொடரும்.
மே 4 முதல் 17-ஆம் தேதிவரை உயா்நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் ஜூன் 1 முதல் 15-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதேகாலத்தில் மாவட்ட நீதிமன்றங்களில் பட்டியலிடப்பட்டுள்ள வழக்குகளும் ஒத்திவைக்கப்படும். இது தொடா்பான தகவல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனஅந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.