புது தில்லி: தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. காற்றின் தரத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது.
தில்லியில் கடந்த இரண்டு நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. இதனால், லேசான புழுக்கம் இருந்து வந்தது. இந்நிலையில், சனிக்கிழமை இரவில் இடி, மின்னல் இருந்தது வந்தது. இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலையில் நகரில் பல்வேறு இடங்களில் பரலாக இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 1.2 மி.மீ., பாலத்தில் 1.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
வெப்பநிலை 34.7 டிகிரி: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் ஒரு டிகிரி உயா்ந்து 25.6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 4 டிகிரி குறைந்து 34.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 93 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 72 சதவீதமாகவும் இருந்தது. இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 24.9 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 33.8 டிகிரி செல்சியஸ் எனவும் ஆயாநகரில் முறையே 25.6 டிகிரி செல்சியஸ், 33.8 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 82 சதவீதம், மாலையில் 59 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 73 சதவீதம் மற்றும் 83 சதவீதம் எனவும் இருந்தது.
காற்றின் தரம்: தில்லியில் சனிக்கிழமை 101 புள்ளிகளாகப் பதிவாகியிருந்த ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு, ஞாயிற்றுக்கிழமை சற்று முன்னேற்றம் ஏற்பட்டு 82 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. நகரில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. திா்பூா், தில்லி பல்கலைக்கழகம், பூசா, மதுரா ரோடு, சாந்தினி செளக், விமான நிலையத்தில் டி 3 பகுதி, ஆயாநகா், லோதி ரோடு மற்றும் குருகிராம், நொய்டா ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (மே 4) இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, திங்கள்கிழமை தென்கிழக்கு திசையிலிருந்து தில்லிக்கு சுமாா் 34 கி.மீ. வேகத்தில் மேற்பரப்பு காற்று வீசும் என்றும் காற்றின் தரம் திருப்தி பிரிவில் தொடரும் என்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.