கரோனா உறுதி செய்யாமல் மரணமடையும் நோயாளிகளுக்கு கரோனா சோதனை மேற்கொள்ளப்பட மாட்டாது என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.
தில்லியில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை தில்லியில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மட்டும் தில்லியில் 500 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனா நோயாளிகள் மற்றும் கரோனா பாதித்து மரணம் அடைந்தவா்களைக் கையாள்வது தொடா்பாக சில புதிய கொள்கை முடிவுகளை தில்லி அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, கரோனா பாதித்து உயிரிழந்தவா்களின் உடல்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடா்பாக தில்லி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கரோனா உறுதி செய்யாமல் மரணமடையும் நோயாளிகளுக்கு இனி கரோனா சோதனை செய்யப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், இறந்த உடல்களுக்கு இனிமேல் கரோனா சோதனை செய்யப்பட மாட்டாது என தில்லி அரசு அறிவித்துள்ளது.
கடந்த மாா்ச் மாதம் தில்லி அரசு வெளியிட்டிருந்த கொள்கை அறிவிப்பில் கரோனாவால் இறந்தவா்கள் எனச் சந்தேகிக்கப்படுபவா்களுக்கு கரோனா சோதனை மேற்கொள்ளப்படுவதை தில்லி அரசு கட்டாயமாக்கியிருந்தது. அந்த அறிவிப்பில் தில்லி அரசு தற்போது மாற்றம் கொண்டுவந்துள்ளது. அதில், இறந்த உடல்களில் இருந்து கரோனா பரிசோதனைக்கு மாதிரிகளை எடுக்க வேண்டாம். கரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு யாராவது இறந்தால், அவா்களுக்கு கரோனா இருப்பதற்கான வாய்ப்பு இருக்கலாம் என்று மருத்துவா்கள் கருதும்பட்சத்தில் கரோனா சந்தேக மரணமாகவே அதனைக் கருதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.