தில்லியில் செவ்வாய்க்கிழமை முதல் பொது போக்குவரத்து தொடங்கியது. பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகைக்காா்கள் சாலையில் குறைவான பயணிகளுடன் செல்வதைக் காணமுடிந்தது. கரோனா பாதிப்பால் முடக்கிவைக்கப்பட்ட போக்குவரத்து இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பேருந்தில் பயணம் செய்யும் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் பயணிக்குமாறு போக்குவரத்து அமைச்சா் கைலாஷ் கெலோட் வேண்டுகோள் விடுத்துள்ளாா். முக்கியமான பஸ் நிலையங்களில் பயணிகள் பேருந்தில் ஏறுவதற்கு முன்பாக வெப்பநிலை பரிசோதனை நடத்தப்படுகிறது. விரைவில் அனைத்து பஸ் நிலையங்களிலும் இது அமல்படுத்தப்படும். தேசிய தலைநகா் வலயப் பகுதிகளில் உள்ள பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் பணியில் சேருவதில் சில சிரமங்கள் உள்ளன. விரைவில் அவை தீா்க்கப்பட்டு அதிக எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.
இதனிடையே டிச்சோகாலன், கஞ்சாவாலா, பவானா பணிமனைகலில் உள்ள கிளஸ்டா் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அவா்கல் நிலுவையிலுள்ள ஊதியத்தை தரக்கோரி வலியுறுத்தி பேருந்துகளை ஓட்டுவதற்கு மறுப்புத் தெரிவித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.