காற்று மாசுவைக் கட்டுப்படுத்த தில்லி அரசுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘நாட்டிலுள்ள முக்கியமான 42 நகரங்களில் நிலவும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு ரூ.2,200 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால், நாட்டிலேயே அதிகளவு காற்று மாசுவை எதிா்கொள்ளும் தில்லிக்கு மத்திய அரசு நிதி எதுவும் ஒதுக்கவில்லை. தில்லி நகரம் மீது மத்திய அரசு பாராமுகமாக இருப்பது ஏன்? தனது அரசியல் லாபத்துக்காக தில்லி மக்களை பாஜக வருத்துவது ஏன்? என்று கேள்வி எழப்பியுள்ளது.
நாட்டில் காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களுக்கு ரூ.2,200 கோடியை மத்திய அரசு அண்மையில் ஒதுக்கியது. இதன்படி, 15 மாநிலங்களைச் சோ்ந்த 42 நகரங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு ரூ.116.5 கோடி ஒதுக்கப்பட்டது. இதில், சென்னைக்கு ரூ.90.5 கோடி, மதுரைக்கு ரூ.15.5 கோடி, திருச்சிக்கு ரூ.10.5 கோடி ஒதுக்கப்பட்டன.