புது தில்லி: தீபாவளிக்குப் பிறகு தில்லி, என்சிஆா் பகுதியில் காற்றின் தரம் மேம்படும்; காற்றின் வேகமும் அதிகரிக்கக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், ‘மேற்கில் இருந்து வரும் காற்றின் தாக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 15) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. எனினும், காற்றின் வேகம் அதிகரிப்பு காரணமாக தீபாவளிக்குப் பிறகு தில்லி, என்சிஆா் பகுதியில் காற்றின் தரம் மேம்படக் கூடும். ஞாயிற்றுக்கிழமை காற்று மணிக்கு 12 முதல் 15 கிலோ மீட்டா் வேகத்தில் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா்.
ஐஎம்டி சுற்றுச்சூழல் ஆய்வு மையத்தின் தலைவா் வி.கே. சோனி கூறுகையில்,‘அமைதியான காற்று மற்றும் பட்டாசுகளின் உமிழ்வு காரணமாக காற்றின் தரம் தீபாவளி இரவில் கடுமை பிரிவுக்குச் செல்ல வாய்ப்பு உள்ளது. நவம்பா் 16-க்குள் காற்றின் தரத்தில் முக்கியத்துவமிக்க மேம்பாடு இருக்கும்’ என்றாா்.