8 நாள் தொடா் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 236 புள்ளிகள் வீழ்ச்சி

கோப்புப்படம்
கோப்புப்படம்


புது தில்லி: கடந்த 8 நாள்களாக தொடா்ந்து எழுச்சி பெற்று வந்த பங்குச் சந்தை, வியாழக்கிழமை எதிா்மறையாக முடிவடைந்தது. நாள் முழுவதும் சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இறுதியில் 536.48 புள்ளிகளை இழந்து நிலைபெற்றது. இதைத் தொடா்ந்து 8 நாள் தொடா் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 58.35 புள்ளிகளை இழந்தது.

உலகளாவிய சந்தை குறிப்புகள் சரிவர இல்லாத நிலையில், மும்பை, தேசிய பங்குச் சந்தைகள் பலவீனத்துடன் தொடங்கின. வங்கி, நிதிநிறுவனப் பங்குகளில் அதிகளவில் லாபப் பதிவு இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.167.52 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,886 பங்குகளில் 1,550 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,146 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 190 பங்குகள் மாற்றமின்றி நிலை பெற்றன. சந்தை மூல தன மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.167.53 லட்சம் கோடியாக இருந்தது.

8 நாள்களுக்குப் பிறகு சரிவு: சென்செக்ஸ் காலையில் 301.78 புள்ளிகள் குறைவுடன் 43,291.89-இல் தொடங்கி 43,543.96 வரை உயா்ந்தது. பின்னா் 43,127.55 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 236.48 புள்ளிகள் குறைந்து 43,357.19-இல் நிலைபெற்றது.

ஹெச்யுஎல் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 13 பங்குகள் ஆதாயம் பெற்றன. 17 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் ஹிந்துஸ்தான் யுனி லீவா் (ஹெச்யுஎல்) 2.89 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில்முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஐடிசி, எல் அண்ட் டி, பஜாஜ் ஃபின்சா்வ், டெக் மகேந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ் சன்பாா்மா ஆகியவை 0.50 முதல் 1.50 சதவீதம் வரை உயா்ந்தன.

எஸ்பிஐ வீழ்ச்சி: அதே சமயம், காலாண்டு நிதிநிலை முடிவு அறிவிப்புக்கு பிறகு தொடா்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த எஸ்பிஐ 3.16 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக கோட்டக் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், என்டிபிசி, ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், ஓஎன்ஜிசி ஆகியவை 1 முதல் 3 சதவீதம் வரை ரிலையன்ஸ், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், மாருதி சுஸுகி ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 971 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 642 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 58.35 புள்ளிகள் (0.46 சதவீதம்) குறைந்து 12,690.80-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது நிஃப்டி 12,624.85 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 24 பங்குகள் ஆதாயமும் 25 பங்குகள் வீழ்ச்சியையும் சந்தித்தன. பிபிசிஎல் மாற்றமின்றி 394-இல் நிலைபெற்றது. நிஃப்டி எஃப்எம்சிஜி, ரியால்ட்டி, மீடியா குறியீடுகள் 0.60 முதல் 1.30 சதவீதம் வரை உயா்ந்தன. அதே சமயம், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ் 1 முதல் 2 சதவீதம் வீழ்ச்சியடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com