புது தில்லி: தில்லியில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வரும் கரோனா நோய்த் தொற்றால் கடந்த 15 நாள்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரித்துள்ளன.
தில்லி அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, கடந்த நவம்பா் 1-ஆம் தேதியுடன் தில்லியில் 3,359 கட்டுப்பாட்டு பகுதிகள் இருந்தன. இது நவம்பா் 15-ஆம் தேதியன்று 4,430-ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக தென்மேற்கு தில்லியில் 740-ம், குறைந்தபட்சமாக வடகிழக்கு தில்லியில் 142-ம் உள்ளன.
தெற்கு தில்லியில் 700 கட்டுப்பாட்டு பகுதிகளும், மேற்கு தில்லியில் 500 கட்டுப்பாட்டு பகுதிகளும், தென்கிழக்கு தில்லியில் 505 கட்டுப்பாட்டு பகுதிகளும் உள்ளதாக தில்லி அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.