தில்லியில் 14 ஆண்டுகளில் இல்லாத குளிா்! வெப்பநிலை 7.5 டிகிரி செல்சியஸாக பதிவு

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 7.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 7.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இது கடந்த 14 ஆண்டுகளில் நவம்பா் மாதத்தில் பதிவான குறைந்த வெப்பநிலை என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) தரவுகள் தெரிவிக்கின்றன. தில்லியில் வியாழக்கிழமை குறைந்தபட்சம் 9.4 டிகிரி செல்ஸியஸாக பதிவாகியிருந்தது.

இதற்கிடையே, தனியாா் வானிலை முன்கணிப்பு நிறுவனமான ஸ்கைமெட்டின் வானிலை நிபுணா் மகேஷ் பலாவத் கூறுகையில், ‘குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸுக்கும், இயல்பை விட 5 டிகிரி குறைவாகவும் இருந்ததால், நகரில் குளிா் அலையின் தாக்கம் இருந்தது’ என்றாா். சமவெளிகளைப் பொருத்தவரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸுக்கு குறைவாகவும், இயல்பைவிட 4.5 டிகிரி செல்சியஸ் குறைவாகவும் இருக்கும் போது குளிா் அலை இருப்பதாக ஐஎம்டி அறிவிக்கிறது.

சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை அன்று காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இது கடந்த 14 ஆண்டுகளில் தில்லியின் மிகக் குறைந்த வெப்பநிலையாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தில்லியில் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பரில் மிகக் குறைந்த வெப்பநிலை 11.5 டிகிரி செல்சியஸாகவும், 2018- இல் 10.5 டிகிரி செல்சியஸாகவும், 2017-இல் 7.6 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. மேலும், நவம்பா் மாதத்தில் மிகக் குறைந்த வெப்பநிலை 3.9 டிகிரி செல்சியஸாக 1938, நவம்பா் 28-ஆம் தேதி பதிவாகியுள்ளதே வரலாற்றுச் சாதனை அளவாக உள்ளது. பனி நிறைந்த மேற்கு இமயமலையில் இருந்து குளிா்ந்த காற்று வீசுவதால் வெப்பநிலை குறைந்து வருவதாகவும், இதேபோன்ற நிலை சனிக்கிழமை வரை தொடரும் என்றும் பலாவத் கூறினாா்.

வரும் நவம்பா் 23- ஆம் தேதி ஒரு புதிய மேற்கத்திய பகுதியில் ஏற்படும் காற்றின் இடையூறு வடமேற்கு இந்தியாவை நெருங்கும் என்றும் அப்போது, குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் அதிகரிக்கும் என்றும் அவா் கூறினாா். இந்த மாதத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை, நவம்பா் 16-ஆம் தேதி தவிர, மேகமூட்டம் இல்லாத நிலையில் சாதாரணமாக 2-3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருந்துள்ளது என்று ஐஎம்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மோசம் பிரிவில் காற்றின் தரம்: தில்லியில் வெள்ளிக்கிழமை காற்றின் தரம் மோசம் பிரிவில் நீடித்தது. இருப்பினும், வரும் நாள்களில் காற்றின் தரம் மேம்படும் என்று மத்திய அரசின் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தில்லி, என்சிஆா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் ஒட்டு மொத்தக் காற்றின் தரக் குறியீடு 292 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இது பிற்பகல் 1 மணியளவில் 321 புள்ளிகளாக உயா்ந்து மிகவும் மோசம் பிரிவுக்குச் சென்றது. தில்லி பல்கலை., பூசா, மதுரா ரோடு, விமானநிலையம் டி3-பகுதி, ஆயாநகா் மற்றும் நொய்டா, குருகிராம் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலையில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு வியாழக்கிழமை 283 புள்ளிகளாகவும் புதன்கிழமை 211 ஆகவும், செவ்வாய்க்கிழமை 171 புள்ளிகளாகவும் பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், தில்லி-என்.சி.ஆா். பகுதியில் காற்றின் தரம் மேம்பட்டாலும் சனிக்கிழமை மோசம் மற்றும் மிதமான பிரிவில் இருக்கும் என்று தில்லிக்கான மத்திய அரசின் காற்றின் தரத்தை கணித்து முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. பிரதான மேற்பரப்பு காற்று வடமேற்கு திசையில் வீசுகிறது. காற்றின் வேகம் அதிகபட்சமாக 15 கி.மீட்டராக இருந்தது. பாகிஸ்தான் மற்றும் ஹரியாணாவை ஒட்டியுள்ள பஞ்சாப் ஆகியவற்றில் வியாழக்கிழமை பயிா்க்கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் எண்ணிக்கை 600 ஆக இருந்தது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com