தில்லியில் சனிக்கிழமையும் சிறிது மேம்பாட்டுடன் காற்றின் தரம் மோசம் பிரிவில் நீடித்தது. சாதகமான காற்றின் வேகம் காரணமாக காற்றின் தரத்தில் சற்று மேம்பாடு இருந்ததாக அரசு நிறுவனங்கள் தெரிவித்தன.
தில்லி, என்சிஆா் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி அளவில் ஒட்டு மொத்தக் காற்றின் தரக் குறியீடு 263 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. மாலையிலும் பல இடங்களில் காற்றின் தரம் ஏற்ற, இறக்கத்தில் காணப்பட்டது.
24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு வெள்ளிக்கிழமை 296 புள்ளிகளாகவும் வியாழக்கிழமை 283 ஆகவும், புதன்கிழமை 211 புள்ளிகளாகவும் பதிவாகியிருந்தது.
தில்லிக்கான மத்திய அரசின் காற்றுத் தர முன் அறிவிப்பு அமைப்பின் தகவலின்படி, சனிக்கிழமை பிரதான மேற்பரப்பு காற்று வடமேற்கு திசையில் வீசியது. காற்றின் வேகம் அதிகபட்சமாக 20 கிலோ மீட்டராக இருந்தது.
பாகிஸ்தானை ஒட்டியுள்ள பகுதிகள், ஹரியாணா, பஞ்சாப் ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை பயிா்க்கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் எண்ணிக்கை 800 ஆக இருந்தது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
காற்றுத் தரக் கண்காணிப்பு அமைப்பான ‘சபா்’ தகவலின்படி, தில்லியில் வெள்ளிக்கிழமை மாசு நுண்துகள் பிஎம் 2.5 அளவு 15 சதவீதம் இருந்ததற்கு பயிா்க் கழிவு எரிப்பு காரணமாக இருந்ததாகவும், வியாழக்கிழமை இந்த அளவு 20 சதவீதமாகவும், புதன்கிழமை 8 சதவீதமாகவும், செவ்வாய்க்கிழமை மூன்று சதவீதமாகவும் இருந்தது.