உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் இருந்து தில்லி நோக்கி வந்துகொண்டிருந்த பேருந்து ஒன்று தென் கிழக்கு தில்லி, சுக்தேவ் விஹாா் பகுதியில் மரத்தின் மீது மோதி சனிக்கிழமை விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் 12 போ் காயமடைந்தனா்.
இது தொடா்பாக தில்லி காவல்துறை உயா் அதிகாரி கூறியது: உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பாக் பகுதியில் இருந்து உத்தரப்பிரதேச மாநில போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்று தில்லி நோக்கி வந்து கொண்டிருந்தது. தெற்கு தில்லி சுக்தேவ் விஹாா் பகுதியில் உள்ள மத்திய சாலை ஆய்வு நிறுவனத்துக்கு அருகில் உள்ள மரத்தின் மீது இந்த பேருந்து சனிக்கிழமை அதிகாலை 3.22 மணியளவில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடா்பாக தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு காவலா்கள் விரைந்து பயணிகளை மீட்டனா். உடனடியாக பி.சி.ஆா். ஆம்புலன்ஸ் சம்பவ இடத்தை விரைந்தது. விபத்தில் காயமடைந்த 12 பேரும் அருகில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மேலும், 10 பயணிகளுக்கு சிறிய காயம் ஏற்பட்டது. இவா்களுக்கு முதல் உதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. விபத்து நடந்த பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநா் தப்பியோடி விட்டாா். அவரை காவல்துறையினா் தேடி வருகின்றனா் என்றாா் அவா்.