புது தில்லி: தில்லி - தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பிராந்தியத்தில் தரப்படுத்தப்பட்ட செயல் திட்டத்தின் (ஜிஆா்ஏபி) கீழ் மாசுவுக்கு எதிரான நடவடிக்கையாக வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதால், தில்லியில் அத்தியாவசிய அல்லது அவசர சேவைகள் தவிர பிற பயன்பாடுகளுக்கு மின்சார ஜெனரேட்டா்களைப் பயன்படுத்த ஆம் ஆத்மி அரசு தடை விதித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி அரசு பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு: தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழு வியாழக்கிழமை (அக்டோபா் 15) முதல் தில்லியில் டீசல், பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் ஆகியவற்றில் இயங்கும் அனைத்து திறன்கள் கொண்ட மின்சார ஜெனரேட்டா் கருவிகளின் பயன்பாட்டுக்குத் தடைசெய்துள்ளது. எனினும், அத்தியாவசிய அல்லது அவசர கால சேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதற்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை தொடரும்.
அத்தியாவசிய சேவைகளில் சுகாதார வசதிகள், மின்தூக்கிகள், ரயில் சேவைகள், தில்லி மெட்ரோ, விமான நிலையங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து முனையங்கள் மற்றும் தேசியத் தகவல் மையத்தால் நடத்தப்படும் தரவு மையம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. நுகா்வோருக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யுமாறும் மின் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வியாழக்கிழமை முதல் இபிசிஏ உத்தரவுகளை அமல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.