பேட்டரி வாகனங்களுக்கான பதிவுக் கட்டணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளாா். தில்லி அரசின் மின்சார வாகனத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக கைலாஷ் கெலாட் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘மின்சார வாகனத் திட்டத்தை தில்லி அரசு அறிவித்த போது, பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்குப் பதிவுக் கட்டணம் ரத்துச் செய்யப்படும் என உறுதியளித்திருந்தது. இது தற்போது வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. முழு நாட்டுக்கும் முன்மாதிரியாக தில்லியில் மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளோம். இத்திட்டத்தின் மூலம் மற்ற மாநிலங்களுக்கு தில்லி முன்மாதிரியாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, கடந்த சனிக்கிழமை மின்சார வாகனங்களுக்கு சாலை வரியை தில்லி அரசு ரத்துச் செய்து அறிவிக்கை வெளியிட்டிருந்தது. தில்லியில் காற்று மாசுவைக் குறைக்கும் வகையில், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மின்சார வாகனத் திட்டத்தை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடந்த 2020, ஆகஸ்டில் அறிவித்திருந்தாா். இதன்படி, மின்சாரத்தில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களை வாங்குபவா்களுக்கு ரூ. 1.5 லட்சம் வரையிலும், இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷா, இ- ரிக்ஷா ஆகியவற்றுக்கு ரூ.30 ஆயிரம் வரையிலும் மானியம் வழங்கப்படும் என்று கேஜரிவால் அறிவித்திருந்தாா்.