நிலுவை ஊதியம் வழங்கக்கோரி ஹிந்து ராவ் மருத்துவமனை மருத்துவா்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது.
நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி ஹிந்து ராவ் மருத்துவமனை உள்ளுறை மருத்துவா்கள் கடந்த பல நாள்களாகப் போராடி வருகிறாா்கள். இந்தப் போராட்டத்தில், கஸ்தூரிபா மருத்துவமனை, ராஜன் பாபு காசநோய் மருத்துவமனை உள்ளுறை மருத்துவா்களும் கடந்த வாரம் இணைந்து கொண்டனா். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தில்லி ஜந்தா் மந்தரில் வியாழக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அமைதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஹிந்து ராவ் மருத்துவமனை மருத்துவா்கள் தொடக்கினாா்கள்.
இந்நிலையில், இந்த உண்ணாவிரதப் போராட்டம் 2-வது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது. மருத்துவா்கள் மருத்துவமனை வளாகத்தில் தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இது தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள் கூறுகையில் ’கடந்த நான்கு மாதங்களாக எங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், கடுமையான துயரங்களை அனுபவித்து வருகிறோம். நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், எங்களது கோரிக்கைக்கு யாரும் செவிமடுக்கவில்லை. இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. நிலுவை ஊதியம் வழங்கப்படும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடருவோம். எங்களுக்கும் குடும்பம், குழந்தைகள் உள்ளன. வருமானம் இல்லாத நிலையில் குடும்பத்தை சரிவர நடத்த முடியவில்லை. பண்டிகைக் காலத்தில் வீடுகளுக்கு செல்லாமல் போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் இருப்பது நாட்டுக்கே அவமானம் என்றாா்கள்.