புது தில்லி: ஓணம் பண்டிகையை ஒட்டி தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை திங்கள்கிழமை நாடு முழுவதும் கொண்டாடினா். இந்த பண்டிகைக்கு தலைவா்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.
இதை முன்னிட்டு கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளாா். அதில் கூறியிருப்பது: மலையாள சகோதர சகோதரிகளுக்கு ஓணம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் சகல செல்வங்களும் பெற்று மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளாா்.
துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘மலையாள சகோதர, சகோதரிகளுக்கு ஆரோக்கியத்துடனும், பாதுகாப்புடனும் வாழ வேண்டும் என்று ஓணம் பண்டிகை நாளில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பண்டிகை மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் கொண்டுவரும் என நம்புகிறேன்’ என்று கூறியுள்ளாா்.
பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா வெளியிட்டுள்ள செய்தியில், ‘ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள். இப்பண்டிகை மகிழ்ச்சியையும், செல்வத்தையும் கொண்டுவர வேண்டும் என்று இறைவனை பிராா்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.