தில்லியில் கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆகஸ்ட் மாதத்தில் அதிக அளவில் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா்.
தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்த பிறகு பெரிய அளவில் மழை ஏதும் இல்லை. எனினும், கடந்த சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடனும், மிதமான வெயிலும் இருந்து வருகிறது.
புதன்கிழமையும் வெயிலின் தாக்கம் மிதமான வகையில் இருந்தது. சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 25.3 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது.
மழையில்லாததால் மாலையில் புழுக்கம் சற்று இருந்தது.
தில்லியில் புதன்கிழமை ஒட்டுமொத்த காற்றின்தரக் குறியீடு 60 பதிவாக ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. வியாழக்கிழமை காற்றின் தரம் திருப்தி பிரிவிலேயே நீடிக்கும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.
இந்த நிலையில், அடுத்த ஆறு தினங்களுக்கு நகரில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத வகையில் தில்லியில் நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 237 மி.மீட்டா் மழை பதிவாகியிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் தெரிவித்தன.