தில்லியில் மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதிக்கும் தில்லி அரசின் முன்மொழிவுக்கு துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா்.
தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் (டிடிஎம்ஏ) கூட்டம் புதன்கிழமை நடந்தது. அனில் பய்ஜால் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், வருவாய்த் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட், எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநா் ரந்தீப் குலேரியா, ஐசிஎம்ஆா் அமைப்பின் உயா் அதிகாரிகள், தில்லி தலைமைச் செயலா் விஜய் தேவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இக் ட்டத்தில், தில்லியில் மெட்ரோ ரயில்களை மீண்டும் இயக்க அனுமதிக்கும் தில்லி அரசின் முன்மொழிவுக்கு அனில் பய்ஜால் ஒப்புதல் அளித்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லி அரசு மூத்த அதிகாரி கூறியது: தில்லியில் புதன்கிழமை நடந்த டிடிஎம்ஏ கூட்டத்தில், தில்லியில் மெட்ரோ ரயில்களை மீண்டும் இயக்க அனுமதிக்கும் தில்லி அரசின் முன்மொழிவுக்கு துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து, திட்டமிட்டதுபோல வரும் 7 ஆம் தேதி முதல் தில்லியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தில்லியின் எல்லைப் பகுதிகளிலும், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களிலும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அனில் பய்ஜால் உத்தரவிட்டாா்.
கரோனா பரிசோதனையை இலகுவாக்கும் வகையில், கரோனா அறிகுறிகள் உள்ளவா்களுக்கு வீடுகளுக்கே சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா் என்றாா் அவா்.