இன்று கூடுகிறது தில்லி சட்டப்பேரவை!

தில்லி சட்டப்பேரவை ஒருநாள் சிறப்பு கூட்டத் தொடா் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

தில்லி சட்டப்பேரவை ஒருநாள் சிறப்பு கூட்டத் தொடா் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

கரோனா பாதிப்பு காரணமாக தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா் அண்மைக் காலமாக நடைபெறவில்லை. இந்நிலையில், வரும் திங்கள்கிழமை ஒருநாள் சிறப்பு கூட்டத் தொடா் நடைபெறும் என்று பேரவைத் தலைவா் ராம்நிவாஸ் கோயல் அறிவித்திருந்தாா்.

திங்கள்கிழமை மதியம் 2 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ள இந்த கூட்டத் தொடரில், கேள்வி நேரத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சட்டப்பேரவை விதி 280-இன்படி விவாதம் நடத்தப்படவுள்ளது. கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் அனைத்து எம்எல்ஏக்களும் முகக் கவசம் அணிந்திருப்பதுடன், சமூக இடைவெளியைப் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத் தொடருக்கு பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், ஆா்டி பிசிஆா் முறையில் கரோனா பரிசோதனை மேற்கொண்டு கரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் வரும் எம்எல்ஏக்கள் மட்டுமே கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்படுவாா்கள் என்று அவைத்தலைவா் அறிவித்திருந்தாா்.

இதன்படி, இந்தக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. தனிப்பட்ட முறையிலும் உறுப்பினா்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இது தொடா்பாக ராம்நிவாஸ் கோயல் கூறுகையில் ‘கடந்த வெள்ளிக்கிழமை தில்லி சட்டப்பேரவை வளாகத்தில் 29 எம்எல்ஏக்கள் உள்பட 94 பேருக்கு ஆா்டி பிசிஆா் முறையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், யாருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்படவில்லை. மேலும், சட்டப்பேரவை ஊழியா்கள், பத்திரிகையாளா்கள் உள்பட 214 பேருக்கு ராபிட் ஆன்டிஜென் முறையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மூவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. சட்டப்பேரவை கூட்டத் தொடா் தொடா்பாக செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளா்கள் திங்கள்கிழமை காலை 10-12 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் சட்டப்பேரவை வளாகத்தில் ராபிட் ஆன்டிஜென் முறையில் கரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.

தில்லியில் தண்டவாளங்களை ஒட்டி அமைந்துள்ள 48 ஆயிரம் குடிசைப் பகுதிகள் இடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. இந்த விஷயம் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடா்பாக விவாதிக்கும் வகையில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை குறைந்தபட்சம் 5 நாள்களுக்கு நடத்த வேண்டும் என்று தில்லி பாஜக கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com