புது தில்லி: தெற்கு தில்லி மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட பல்வேறு அதிரடி சோதனைகளில் கைப்பற்றப்பட்ட 16,262 மதுபான பாட்டில்கள் தில்லி காவல் துறையால் செவ்வாய்க்கிழமை ஜேசிபி இயந்திரம் மூலம் அழிக்கப்பட்டன.
தில்லியில் சட்டவிரோத மதுபானங்களை இல்லாமல் செய்யும் வகையில், தில்லி காவல்துறை, கலால் துறையுடன் இணைந்து அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றன. இந்தச் சோதனையில் தெற்கு தில்லி மாவட்டத்தில் மட்டும் 16,262 மதுபான பாட்டில்களை போலீஸாா் கைப்பற்றியிருந்தன. இந்த பாட்டில்கள் செவ்வாய்க்கிழமை ஜேசிபி இயந்திரம் மூலம் அழிக்கப்பட்டன.
இது தொடா்பாக தில்லி காவல்துறை உயரதிகாரி கூறுகையில், ‘ தெற்கு தில்லியின் பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மதுபான பாட்டில்களை மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து அழித்தோம். சட்டவிரோத மதுபானங்கள் அண்டை மாநிலங்களில் இருந்து தில்லிக்கு கடத்தி வரப்படுகின்றன. மாநில எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.