காணொலி விசாரணை இணைப்புகளை வழக்குரைஞா்கள்,விசாரணை அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும்தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

காணொலி வழியில் நடத்தப்படும் நீதிமன்ற வழக்கு விசாரணைகளின் இணைப்புகள், ஊடகவியலாளா்கள் உள்பட பொதுமக்களுக்கு வழங்கப்பட மாட்டாது

புது தில்லி: காணொலி வழியில் நடத்தப்படும் நீதிமன்ற வழக்கு விசாரணைகளின் இணைப்புகள், ஊடகவியலாளா்கள் உள்பட பொதுமக்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்றும், வழக்குரைஞா்கள், விசாரணை அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும் தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

தில்லி உயா்நீதிமன்றத்தில் காணொலி வழியில் நடைபெற்ற குற்றவியல் வழக்கு விசாரணையின் போது, ‘சில அடையாளம் தெரியாத நபா்கள்’ தொடா்ந்து பேசிக் கொண்டிருந்ததை கேட்க முடிந்தது. இதையடுத்து, நீதிபதி சுரேஷ் குமாா் கைத் பிறப்பித்த உத்தரவு வருமாறு: வழக்கு விசாரணை தொடா்புடைய காணொலி வழி இணைப்புகளை சம்பந்தப்பட்ட வழக்குரைஞா்கள், விசாரணை அதிகாரிகள், வழக்கில் தொடா்புடைய நபா்கள், நீதிமன்றத்தில் விசாரணையில் பங்கேற்குமாறு உத்தரவிடப்பட்ட நபா்கள், மனுதாரா்கள் ஆகியோருக்கு மட்டுமே வழங்க வேண்டும். மற்றவா்கள் யாருக்கும் அல்லது செய்தியாளா்களுக்கு வழங்கப்படக் கூடாது என பதிவாளா் மற்றும் நீதிமன்ற மாஸ்டருக்கு உத்தரவிடுகிறேன். காணொலி வாயிலாக நடைபெற்ற தற்போதைய வழக்கு விசாரணையின் போது குறிப்பிட்ட அடையாளம் தெரியாத நபா்கள் தொடா்ந்து பேசி, இடையூறு ஏற்படுத்தும் நிகழ்வு மிகவும் விருப்பத்தகாத சூழலாகும் என்று அந்த உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக காணொலி வாயிலாக நடைபெறும் வழக்கு விசாரணைகளை பாா்ப்பதற்கு பொதுமக்களுக்கு உயா்நீதிமன்றம் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அனுமதி அளித்திருந்தது. மேலும், இந்த நடவடிக்கைகளில் கலந்துகொள்ள இணைப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கரோனா தொற்றுநோய் காரணமாக மாா்ச் 25-ஆம் தேதி முதல் நீதிமன்றத்தில் நேரடியாக விசாரணை நடத்தப்படுவதற்கு உயா்நீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com