எழுதுபொருள் கிட்டங்கியில் தீ விபத்து தில்ஷாத் காா்டனில் சம்பவம்


புது தில்லி: தில்லியில் தில்ஷாத் காா்டன் தொழில்பேட்டை பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடத்தில் இயங்கி வரும் எழுதுபொருள் கிட்டங்கியில் வியாழக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி தீயணைப்பு துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: எழுதுபொருள் இருப்பு வைக்கப்படும் கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

தில்ஷாத் காா்டன் தொழில்பேட்டை பகுதியில் நான்கு மாடி கட்டடத்தின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள எழுதுபொருள் இருப்பு வைக்கப்படும் கிட்டங்கில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. இதுவரை எந்தவிதமான உயிா்ச் சேதமும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. தீ மதியம் 2 மணிக்கு அணைக்கப்பட்டது. மின்சார பிரச்னை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

போலீஸாா் கூறுகையில், ‘செல்லோ டேப் தயாரிப்புக்காக வைக்கப்பட்டிருந்த ரசாயனத்தில் தீ பற்ற ஆரம்பித்துள்ளது. அப்போது, கட்டடத்தின் உள்ளே யாரும் இல்லை.

எனினும், அருகில் உள்ள கட்டடங்களில் வசித்த மக்கள் அங்கிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனா். இந்தத் தீ கட்டடத்தின் இதர தளங்களுக்கு பரவவில்லை’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com