புது தில்லி: இந்தியாவில் கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை புதன்கிழமை 1.15 லட்சத்தைத் தாண்டியது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 28 லட்சத்து 1,785ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் மேலும் 630 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு செப்.17}ஆம் தேதி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 97,894ஆக இருந்தது. இதுவே, உச்சபட்சமாக இருந்தநிலையில், 7 மாதங்களுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை கடந்த திங்கள்கிழமை (ஏப். 5) ஒரு லட்சத்தைத் தாண்டி, புதிய உச்சத்தை எட்டியது. இந்நிலையில், தினசரி கரோனா பாதிப்பு 3 நாள்களுக்குள் மீண்டும் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. புதன்கிழமை ஒரே நாளில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 630 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் 297 பேர், பஞ்சாபில் 61 பேர், சத்தீஸ்கரில் 53 பேர், கர்நாடகத்தில் 39 பேர், உத்தர பிரதேசத்தில் 30 பேர், மத்திய பிரதேசத்தில் 18 பேர், தில்லி, குஜராத்தில் தலா 17 பேர், தமிழகத்தில் 15 பேர், கேரளத்தில் 14 பேர், ராஜஸ்தானில் 13 பேர் உள்பட 630 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கரோனா தொற்றால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 66 ஆயிரத்து 177}ஆக அதிகரித்துள்ளது. இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 56,330 உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன.
25 கோடியைத் தாண்டிய பரிசோதனை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) தகவல்படி, கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் 12 லட்சத்து 8 ஆயிரத்து 339 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை, மொத்தம் 25 கோடியே 14 லட்சத்து 39 ஆயிரத்து 598 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.