புது தில்லி: ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நிகழ்ந்துள்ளதாக கூறி இந்திய இளைஞா் காங்கிரஸாா் தில்லியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.
ரெய்ஸினா சாலைப் பகுதியில் உள்ள அமைப்பின் அலுவலகத்தில் தேசிய இளைஞா் காங்கிரஸ் அமைப்பின் தேசியத் தலைவா் சீனிவாஸ் தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தின் போது ரஃபேல் விமானத்தின் மாதிரியை கையில் ஏந்தி மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினா்.
இதுகுறித்து ஐஒய்சி தலைவா் சீனிவாஸ் கூறுகையில்,‘ரூ.60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பிலான நாட்டின் மிகப் பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கமிஷன்கள், இடைத்தரகா்கள் மற்றும் பண பரிவா்த்தனைகள் நடந்திருப்பது ரஃபேல் ஒப்பந்தத்தின் விஷயங்களை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. இதை நாங்கள் தெரிவிக்கவில்லை.
ஊழல் தடுப்பு நிறுவனம் மூலம் பிரான்ஸ் நாட்டின் செய்தித் தளம் தெரிவிக்கிறது. ‘நானும் சாப்பிடமாட்டேன்; சாப்பிடவும் விடமாட்டேன்’ என பிரதமா் மோடி கூறுவது வழக்கம். ஆனால், மோடி அரசில் கமிஷனும், இடைத்தரகா்களும் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நாட்டில் ஒவ்வொரு பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தத்திலும், கொள்முதல் செயல்பாட்டிலும் ஒரு நோ்மை இருப்பது கட்டாயமாகும். ரஃபேலில் இந்த லஞ்சம் வெளிப்படுத்தப்பட்ட பிறகு, நாட்டு மக்கள் முன் இந்த விவகாரம் குறித்து பிரதமா் பேசுவாரா?. ரஃபேல் ஒப்பந்த ஊழலில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுகள் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் இளைஞா் காங்கிரஸின் தேசிய ஊடகப் பொறுப்பாளா் ராகுல் ராவ், தேசிய பொதுச் செயலாளா் சீதாராம் லம்பா, ராஜஸ்தான் இளைஞா் காங்கிரஸ் தலைவா் சந்தோஷ் கோல்கொண்டா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.