தில்லியில் செவ்வாய்க்கிழமை பகலில் லேசான மழை பெய்தது. வானம் மேக மூட்டமாக இருந்தது. குறைந்தபட்ச, அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட குறைந்திருந்தது.
தில்லியில் வழக்கமாக ஜூன் இறுதியில் பருவமழை பெய்யத் தொடங்கும். இந்த நிலையில், 16 நாள் தாமதாக ஜூலை 13-ஆம் தேதி மழை தொடங்கியது. எனினும், சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், தில்லியின் பருவ சூழல் இதமாக உள்ளது.
தில்லிக்கான பிரதிநிதித்துவ தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 1 டிகிரி குறைந்து 25.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 டிகிரி அதிகரித்து 34.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 85 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 65 சதவீதமாகவும் இருந்தது.
செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் தூறல் மழை மட்டுமே இருந்தது.
ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு மாலை 7 மணி அளவில் 67 புள்ளிகளாக பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது.
முன்னறிவிப்பு: தில்லியில் புதன்கிழமை (ஆகஸ்ட் 4) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.