புது தில்லி : தமிழகத்திற்கு 102 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் 8,705.2 டன்கள் திரவ மருத்துவ ஆக்சிஜன்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இதற்கு ரயில் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்றும் என்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
கரோனா நோய்த் தொற்றை முன்னிட்டு நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இதை முன்னிட்டு ரயில்வே டேங்கா் மூலம் நாடுமுழுவதும் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டது.
இது குறித்து கரூா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் எஸ். ஜோதி மணி, தமிழகம் உள்பட நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்ட ஆக்சிஜன் மற்றும் இதற்கு ரயில்வே வசூலித்த கட்டணம் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பிருந்தாா்.
இதற்கு பதிலளித்து மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
நாடுமுழுக்க 920 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டது. இவைகள் மூலம் கடந்த ஜூலை 27 -ஆம் தேதி வரை 38,420.61 டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டது. இதற்கான செலவுத் தொகை கணக்கிடப்படவில்லை. ஒருவேளை கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் கூட மிகக் குறைவான தொகைதான் வசூலிக்கப்படும்.
தமிழகத்திற்கு 102 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மூலம் கடந்த ஜூலை 27 ஆம் தேதி வரை 8,705.2 டன் மருத்துவ ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டது. இது தொடா்பாக தமிழக அரசிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை என ரயில்வே அமைச்சா் தெரிவித்தாா்.