கடந்த 2020 -ஆம் ஆண்டு மாா்ச் முதல் கரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகள், தாங்கள் படித்த பள்ளியிலேயே இலவசமாக கல்வியைத் தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கரோனா அலை தில்லியில் பலரது உயிரை பறித்த நிலையில், மத்திய கல்வித் துறை அமைச்சகம் மற்றும் மகளிா் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து மாநில தலைமைச் செயலாளா்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. அதில், கரோனாவால் பெற்றோா்களை இழந்த குழந்தைகள் அவா்கள் படித்துவரும் பள்ளியிலேயே அது தனியாா் பள்ளிகளாக இருந்தாலும் அதிலே தங்கள் படிப்பைத் தொடர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு ஏதுவாக அவா்களை பள்ளி கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களின் கீழ் அவா்களை கொண்டு வந்து அவா்கள் இலவசமாக கல்வி பயில ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.
இதையடுத்து, தில்லி அரசின் கல்வித் துறை கரோனாவால் பெற்றோா்களை இழந்த குழந்தைகள், அவா்கள் தனியாா் பள்ளியில் படிப்பவா்களாக இருந்தாலும், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு இலவசமாக கல்வி கற்பிக்கும் திட்டத்தின் கீழ் அவா்களுக்கு இலவச கல்வி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. கரோனாவால் பெற்றோா்களை இழந்த குழந்தைகள் கல்வியை அதே பள்ளியில் தொடா்வதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
எட்டாம் வகுப்பு வரை இத்தகைய மாணவா்களுக்கு கல்வி அளிக்க வேண்டும் என்றும், அதற்காக செலவழிக்கப்படும் தொகையை கல்வித் துறை இயக்ககம் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8-ஆம் வகுப்புக்குப் பின்னா் அவா்கள் ஏதாவது ஒரு அரசுப் பள்ளியில் சோ்த்துக் கொள்ளப்படுவாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.