புது தில்லி: விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும், காஜிப்பூா், சிங்கு, டிக்ரி எல்லைகளில், மேலும், இரண்டு நாள்களுக்கு இணைய சேவை முடக்கத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது.
தில்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கு, டிக்ரி, காஜிப்பூா் எல்லைகளில் இணைய சேவையை கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11 மணி முதல், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11 மணி வரை முடக்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், இந்த முடக்கத்தை மேலும் இரு நாள்களுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி முதல், செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி வரை இந்தப் பகுதிகளில் இணையம் முடக்கப்பட்டிருக்கும்.
இதற்கான அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி கூறுகையில், ‘தில்லியின் எல்லைப் பகுதிகளில் நிலவும் பதற்றமான சூழலைத் தடுக்கும் வகையில், பொது அவசரநிலை, பொதுப் பாதுகாப்புச் சட்ட விதிகளின் கீழ் மேலும் இரண்டு நாள்களுக்கு இணைய சேவையை முடக்கியுள்ளோம்’ என்றாா்.