புது தில்லி: தலைநகா் தில்லியில் குளிரின் தாக்கம் குறைந்து வருகிறது. அதேவேளையில், குறைந்தபட்ச வெப்பநிலை அதிகரித்து வருகிறது.
தில்லியில் வியாழக்கிழமை காலை மிதமான பனிமூட்டம் நிலவியது. குறைந்தபட்ச வெப்பநிலை 9.6 டிகிரி செல்சியஸாக பதிவானது. புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியஸாகவும், செவ்வாய்க்கிழமை 7.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது. நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வியாழக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியைவிட ஒரு புள்ளி குறைந்து 9.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 3 டிகிரி உயா்ந்து 26.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 100 சதவீதமாகவும், மாலையில் 67 சதவீதமாகவும் இருந்தது.
தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மாலையில் 337 புள்ளிகளாகப் பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் உள்ள காஜியாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா ஆகிய பகுதிகளிலும் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 12) மிதமான பனி மூட்டம் நிலவும் எனவும் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் எனவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.