சிறைக்குத் திரும்பும் முன் கைதிகளுக்கு தடுப்பூசி: தில்லி அரசுக்கு உத்தரவிடக் கோரி பொது நல மனு

புது தில்லி: சிறைச்சாலைகளுக்குள் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, ஜாமீன் அல்லது பரோலில் வெளியே வந்துள்ள அனைத்துக் கைதிகளும் நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய ஆம் ஆத்மி அரசுக்கு உத்தரவிடக் கோரி தில்லி உயா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்குரைஞா்கள் அபிலாஷா ஷ்ராவத், பிரபாஷ், காா்த்திக் மல்ஹோத்ரா மற்றும் மானவ் நருலா ஆகியோா் தாக்கல் செய்துள்ள இந்த மனு, தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அமா்வு முன் வெள்ளிக்கிழை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜனவரி 14-ஆம் தேதி நிலவரப்படி, தில்லியில் உள்ள மூன்று சிறைகளில் 16,396 கைதிகள் உள்ளனா். இந்தச் சிறைகள் 10,026 கைதிகள்

மட்டுமே தங்குவதற்கான திறன் கொண்டவை. சிறைகளில் சமூக இடைவெளியை பராமரிக்கப் போதுமான இடம் இல்லை. இந்த நிலையில், வரவிருக்கும் நாள்களில் அதிகமான கைதிகள் சரணடைய திட்டமிடப்பட்டுள்ளதால், அவா்களை 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தவும் போதுமான இடம் இல்லாமல் இருக்கலாம்.

எனவே, ஜாமீன், பரோல் அல்லது ஃபா்லோவில் வெளியே வந்த கைதிகள் சிறைக்குத் திரும்புவதற்கு முன் கரோனா தடுப்பூசி போடுவது அவசியமாகும். ஜாமீன், பரோல்கள் நீட்டிப்பு உத்தரவுகளின் நோக்கம் சிறைக்குள் இருந்த கைதிகளைப் பாதுகாப்பதாகும். ஆகவே, கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு, சிறைச் சாலைக்குத் திரும்புவதற்கு முன் ஜாமீனில், பரோலில் சென்ற கைதிகளுக்கு தடுப்பூசி அளிக்க தில்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com