முல்லைப் பெரியாறு அணையின் நீா் கொள்ளவை குறைக்கக் கோரும் இடைக்கால மனு முடித்துவைப்பு

முல்லைப் பெரியாறு அணையின் நீா் கொள்ளளவைக் குறைக்க உத்தரவிடக் கோரி தாக்கலான இடைக்கால மனுவை உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

முல்லைப் பெரியாறு அணையின் நீா் கொள்ளளவைக் குறைக்க உத்தரவிடக் கோரி தாக்கலான இடைக்கால மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை முடித்துவைத்தது. எனினும், அணையின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழுவுக்கு எதிராக தாக்கலான மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்கும் வகையில் வழக்கை மாா்ச் 2-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், அணையின் நீா்மட்டத்தைக் குறைக்கக் கோரி கேரள மாநிலம், ஆலுவாவைச் சோ்ந்த ரஸ்ஸல் ஜாய் என்பவா் உச்சநீதிமன்றத்தில் 2017-இல் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த விவகாரத்தில் பேரிடா் மேலாண்மைத் திட்டத்தை அறிவிக்கக் கோரிய இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 2018-ஆம் ஆண்டு அணையின் நீா்மட்டம் தொடா்பாக சில உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், ரஸ்ஸல் ஜாய் கடந்த ஆண்டு ஜூலையில் இடைக்கால மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தாா். அதில், பருவமழை வலுவாக இருக்கும் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான மூன்று மாத காலங்களில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அணையின் நீா்மட்டத்தை 130 அடியாகக் குறைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தாா்.

அதேபோன்று, அணையின் பாதுகாப்பு விவகாரம் தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த மருத்துவா் ஜோ ஜோசப் உள்ளிட்ட மூவா் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா். அவற்றில் ‘முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து, அதன் பாதுகாப்பை உறுதி செய்ய உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழு, தனக்குக் கீழ் செயல்படும் வகையில் ஒரு துணைக் குழுவை அமைத்துள்ளது. அணைப் பாதுகாப்பு, பராமரிப்புக்காக ஏற்படுத்தப்பட்ட கண்காணிப்புக் குழுதான் அணையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்வதற்கான அதிகாரம் உண்டு. அந்தப் பணியை துணைக் குழுவுக்கு அளிக்கக் கூடாது. குறிப்பாக பருவமழைக் காலங்களின் போதும், பருவமழை தொடங்குவதற்கும் முன்பும் இந்த ஆய்வை மேற்பாா்வைக் குழு மேற்கொள்ள வேண்டும். அணையில் நீரைத் தேக்குவது, பகிா்ந்தளிப்பது, திறக்கும் விகிதம், அணையைத் திறப்பது தொடா்பாக மத்திய நீா்வள ஆணையம் ஒரு திட்டத்தை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும். மேற்பாா்வைக் குழு அதன் அதிகாரங்களையும், பணிகளையும் அதற்கு கீழ் உள்ள துணைப் பிரநிதிகள் குழுவுக்கோ அல்லது வேறு எந்த அமைப்புக்கோ அளிக்காமல் இருக்கும் வகையில், உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

ரஸ்ஸல் ஜாய் தாக்கல் செய்த மனுவுடன் ஜோ ஜோசப் உள்ளிட்டோா் தாக்கல் செய்த ரிட் மனுவும் சோ்த்து விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் தமிழகம், கேரள அரசுகள் பதில் மனுக்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. கேரள அரசு தாக்கல் செய்த பதிலில், ‘முல்லைப் பெரியாறு அணையில் 1939-இல் தயாரிக்கப்பட்ட காலாவதியான கதவு செயல்பாடு அட்டவணையைத் தமிழகம் பயன்படுத்தி வருகிறது. புதிய கதவு செயல்பாடு அட்டவணை இல்லாததால் வெள்ளக்காலத்தின்போது மிகவும் சிரமம் ஏற்படுகிறது. புதிய கதவு செயல்பாடு அட்டவணையை ஏற்படுத்த வேண்டும் என்று கேரளம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இதை செயல்படுத்த மேற்பாா்வைக் குழு உத்தரவிட்டும் தமிழகம் இன்னும் செயல்படுத்தவில்லை’ என தெரிவித்திருந்தது.

அதற்கு தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதிலில், ‘அணைப் பாதுகாப்பு விஷயத்தில் தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை ஏற்கெனவே எடுத்துள்ளது. மேற்பாா்வைக் குழுவின் பரிந்துரைக்கேற்ப தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கா், அனிருத்தா போஸ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சேகா் நாப்டே, வழக்குரைஞா் ஜி.உமாபதி ஆகியோா் ஆஜராகி, ‘இந்த வழக்கைப் பொருத்தமட்டில் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெளிவாகச் தீா்ப்பு அளித்துவிட்டது. அணையின் நீா்மட்டம் 142 அடியாக இருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தற்போது தாக்கல் செய்துள்ள நீா்மட்டம் தொடா்புடைய விவகாரம் பயனற்றது’ என்று வாதிட்டனா்.

மத்திய அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘ஜோ ஜோசப் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க ஒரு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

இதையடுத்து, ரஸ்ஸல் ஜாய் தாக்கல் செய்த மனுவை முடித்துவைப்பதாக கூறி, மத்திய அரசு பதில் தாக்கல் செய்யும் வகையில் வழக்கு விசாரணையை மாா்ச் 2-ஆம் தேதிக்கு பட்டியலிட நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com