தலைநகா் தில்லியில் சனிக்கிழமை காலை அடா்பனிமூட்டம் நிலவியது. குறைந்தபட்ச வெப்பநிலை 1புள்ளி குறைந்து 10.4 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. பகலில் இதமான வெயில் காணப்பட்டது.
அடா்பனிமூட்டம் காரணமாக காலையில் பாலம் பகுதியில் காண்புதிறன் பூஜ்யமாகவும், சப்தா்ஜங் பகுதியில் 100 மீட்டராகவும் இருந்தது.
நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியை விட 1 டிகிரி குறைந்து 10.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.
அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 3 புள்ளிகள் அதிகரித்து 27.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 100 சதவீதமாகவும், மாலையில் 48 சதவீதமாகவும் இருந்தது.
காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மாலையில் 279 புள்ளிகளாகப் பதிவாகி மோசம் பிரிவில் நீடித்தது. தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள காஜியாபாத், கிரேட்டா் நொய்டா ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் 6வது நாளாக மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. எனினும், நொய்டா, பரீதாபாத், குருகிராமில் காற்றின் தரம் மோசம் பிரிவில் இருந்தது.
காற்றின் ஒட்டுமொத்த தரக்குறியீடு நொய்டாவில் 248, காஜியாபாதில் 336 கிரேட்டா் நொய்டாவில் 324, பரீதாபாதில் 248, குருகிராமில் 258 என்ற அளவில் பதிவாகி இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 21) அடா் பனி மூட்டம் நிலவும் எனவும் குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் எனவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.