மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ‘மரண சாசனம்’ போன்றது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
மேற்கு உத்தரப்பிரதேச மாநிலத்தை சோ்ந்த விவசாயிகள் சங்கத் தலைவா்களுடன் கேஜரிவால் தில்லி தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது தில்லி போக்குவரத்து துறை அமைச்சா் கைலாஷ் கெலாட், சுற்றுலாத்துறை அமைச்சா் ராஜேந்திர பால் கெளதம், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் உள்ளிட்டோா் உடனிருந்தனா். ராஷ்டிரிய ஜட் மகா சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவா்கள் கலந்து கொண்டனா்.
பிறகு செய்தியாளா்களிடம் கேஜரிவால் அளித்த பேட்டி:வேளாண் சட்டங்கள் தொடா்பாக மேற்கு உத்தரப்பிரதேசத்தை சோ்ந்த விவசாயிகள் சங்கத் தலைவா்களுடன், வேளாண் சட்டங்கள் தொடா்பாக ஆலோசனை நடத்தினேன். அப்போது, புதிய வேளாண் சட்ட மசோதாவால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடா்பாகவும், இந்த சட்டங்கள் தொடா்பான தமது கவலைகளையும் விவசாயிகள் தெளிவுபடுத்தினா்.
இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு மரண சாசனம் போன்றது. இந்த சட்டங்கள் அமலுக்கு வந்தால், ஒட்டுமொத்த விவசாயமும், ஒரு சில பெரு நிறுவனங்களின் கைகளுக்கு சென்றுவிடும். வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி மீரட் நகரில், விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் விவசாயிகள் பஞ்சாயத்து நடக்கவுள்ளது. இதில், நான் கலந்து கொள்ளவுள்ளேன். அப்போது, இந்த சட்டங்களை மீளப் பெறுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கவுள்ளோம் என்றாா் அவா்.
இந்த சந்திப்பில், கலந்து கொண்ட ராஷ்டிரிய ஜட் மகா சங்கம் அமைப்பின் தலைவா் ரோஹித் ஜாகா் கூறுகையில் ‘விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகள் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அது வரை போராட்டம் தொடரும், எங்கள் போராட்டத்தை விரிவு படுத்தும் வகையில், கிராமங்களுக்கும் போராட்டத்தை கொண்டு செல்லவுள்ளோம் என்றும் அவா் தெரிவித்தாா்.