புது தில்லி: கரோனாவுக்கு எதிரான பாதுகாப்பைக் குறைக்கக் கூடாது என்றும், தடுப்பூசி போடுவதில் மக்கள் மத்தியில் உள்ள தயக்கத்தை போக்க பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளை தில்லி துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால் திங்கள்கிழமை கேட்டுக்கொண்டாா்.
தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் (டி.டி.எம்.ஏ.) கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் தலைமை வகித்தாா்.
முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா மற்றும் தில்லி அமைச்சா்கள் பலா் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தின்போது அனில் பய்ஜால் பேசுகையில், ‘கரோனா இணக்க நடத்தை விதிகளை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும். கரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடைமுறைகளை குறைக்கக் கூடாது.
கரோனா தடுப்பூசி தொடா்பான தயக்கத்தை மக்களிடம் இருந்து போக்க தேவையான பிரசாரம் மேற்கொள்வது அவசியம்.
நோய் பரவும் வகையில் நிகழ்வுகள் இல்லாத வகையில் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் தற்போது நடைபெறும் கரோனா தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.