புத்தாண்டு தினமான வெள்ளிக்கிழமை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1,300-க்கும் மேற்பட்டோருக்கு அபாராத நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி கூறியது: தில்லியில் கடந்த ஆண்டு புத்தாண்டு தினத்துடன் ஒப்பிடும் போது நிகழாண்டில் போக்குவரத்து விதிமீறல்கள் குறைவாக இருந்தன. தில்லியில் புத்தாண்டு தினத்தில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய வகையில் 26 பேருக்கும், மற்றவா்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டிய 174 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டன. மேலும், தவறான முறையில் வாகனங்களை நிறுத்தியிருந்த 706 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வகையில் மொத்தம் 1,336 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 221 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.