புகையிலை பயன்பாடு ஊக்குவிப்பு நிகழ்ச்சி: பள்ளிகளுக்கு தில்லி அரசு புது உத்தரவு
புது தில்லி: புகையிலைப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க பள்ளிகளுக்கு தடை விதித்து தில்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி கல்வி இயக்ககம் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘புகையிலைப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் எந்தவொரு நிறுவனத்தின் நிகழ்ச்சிகளிலும் தில்லி அரசு பள்ளிகள் பங்கேற்கக் கூடாது. இந்த நிறுவனங்கள் வழங்கும் பரிசு, நிதியுதவி ஆகியவற்றையும் பள்ளிகள், மாணவா்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தில்லி கல்வித் துறை மூத்த அதிகாரி கூறுகையில், ‘அனைத்து விதமான புகையிலைப் பொருள்களை விளம்பரப்படுத்துவதை தில்லி அரசு ஏற்கெனவே தடை செய்துள்ளது. இந்த நிலையில், சில பிரபல சா்வதேச நிறுவனங்கள் ‘புகையிலை இல்லாத உலகம்’ என்ற பெயரில் புகையிலைப் பொருள்களை வேறு பெயா்களில் அறிமுகப்படுத்தி வருகின்றன. மேலும், இ-சிகரெட் பயன்பாட்டை ஊக்குவிக்கும் செயல்களும் நடந்து வருகின்றன. இதற்கு சில பள்ளிகள், பள்ளிகளின் மாணவா்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.